Tuesday, 27 March 2018

வாழட்டும் தமிழன்னை...வெல்லட்டும் தமிழ்...!!




நானும் என் தமிழும் 




தேடிச்சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையானபின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ..
                                    “பாரதி”

இந்த பெயரின் வசீகரம் என்னை உண்ண
தமிழின் மீது ஆர்வம் அளவின்றி என்னுள் ஊறியது

அன்னிய மொழியில் கற்பது கண்ணியமில்லை என எண்ணி தமிழ் வழியில் பள்ளிக்கல்வி பயின்றேன்..
வயிற்றுப்பசியை போக்க தந்தையின் வயல்வெளி
அறிவுப்பசியை போக்க அன்னையின் தமிழ்மொழியென செழிப்பாய் கழிந்தது பள்ளிபருவம்..

பொறியியல் படிக்க எனக்கு ஆசை ஆனால் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய கட்டாயம்..
தாங்கி வளர்த்த தாய் வீட்டை தாண்டி செல்லும் பருவப்பெண்ணின் மனநிலை எனது..

குழந்தையின் அழுகை அறிந்து தாய் கண்துடைப்பது போல அரசாங்கத்தின் புது முயற்ச்சி.. பொறியியல் தமிழில் படிக்கலாம் என்றும், உத்தியோகத்திற்கு உத்திரவாதம் உண்டு என்ற அறிக்கை வெளியாக... உதிர்ந்த மலர்கள் தானாக சுழன்று தாவி உதிர்ந்த கிளையினை அடைவது போல வியப்பு எனக்குள்..
விரைந்து சென்று சேர்ந்தேன் தமிழில் பொறியியல் கற்க..

அரசியல் தலைவர்கள் மேல் பெரும் மதிப்பு
தமிழில் புத்தகங்கள் புது பதிப்பு
தொட்டுத்தழுவி விரும்பிப்படித்தேன்.. 

ஆங்கில வழி பயிலும் மாணவர்களின் அலட்சிய பார்வை உனது உலகம் சிறிது என கூறுவதை போல் இருந்தது..
என் உலகம் சிறிதெனினும் தன்மானத்துடன் வாழும் தமிழன் என்ற கர்வத்தினால் அவர்களின் அலட்சியத்தை நான் அலட்சியப்படுத்தினேன்.. ஆனால் அவர்களின் அகந்தையின் அர்த்தம் அப்போது புரியவில்லை. நான்கு வருடம் கழித்து புரிந்தது..

பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு கல்லூரியில்... போரில் சிப்பாய்கள் போல சீறினார் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்கள்.. அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த குடிமகனாய் நான்
போட்டியிட்டு தோற்றுப்போயிருந்தால் கூட போட்டியிட்ட மகிழ்ச்சியாவது மிஞ்சும்.. போட்டியிடாமலே தோற்றுப்போன எங்களுக்கு அந்த ஆறுதல் கூட இல்லை..

கல்லூரி முடிய நான் வேலையில்லா பட்டதாரி
பல நிறுவனங்களின் படிகளை ஏறி ஏறி அவர்கள்  மாறி மாறி கேட்ட கேள்விகளின் ஒலி வேறு ஆனால் கேள்வி ஒன்றுதான் “Why you didn’t study Engineering in English..??”

என் நாட்டில் என் மொழி படித்து என்ன மதிப்பு என்ற கோவம்..

காற்றில் கரையும் வார்த்தைகள் தானே என்று வாக்குறுதிகளை தூக்கிலேற்றிய அரசின் மீது வெறுப்பு..
.
பொருளின்றி இருளில் மூழ்கிய வாழ்கையை வாழ்வதில் பொருளென்ன என்ற குழப்பம்..

அடுத்து என்ன செய்யபோகிறோம் என்ற எதிர்காலம் கொடுத்த பதற்றம்..

இதையும் தாண்டி ஆங்கிலத்தில் பயின்றால் தான் வேலை என்ற எண்ணம் கொடுத்த அருவருப்பு..

தமிழ் ஆசிரியனாகவோ, எழுத்தாளனாகவோ  என் தமிழைக் கொண்டு நான் பிழைத்திருக்க முடியும்
ஆனால் நான் படித்த பொறியியல் படிப்புக்கான வேலை என்றைக்காவது ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

என் தமிழன்னையின் ஆசியால் நான் நினைத்தவாறு என் வாழ்கை ஒரு நாள் மாறும் என்பதில் ஐயமில்லை ஆனால் தன் தாய் மொழியில் பேசுதல் அநாகரிகம் என்று அடுத்த தலைமுறையிடம் வெட்கமின்றி எடுத்துரைக்கும் மக்கள் மத்தியில் என் தமிழ் வாழுமா என்ற ஐயத்திற்கு பதிலில்லை..

இருந்தாலும் என்னை போன்ற தமிழ் பயின்ற ஏனையோர்களால் வாழட்டும் தமிழன்னை
வெல்லட்டும் தமிழ்...!



No comments:

Post a Comment