Saturday, 7 April 2018

காவிரி மேலாண்மை வாரியம் ஏன் தேவை..??




தமிழ்நாட்டுக்குக் காவிரியில் சராசரியாக ஆண்டுக்கு 396 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து வந்தது. 1975-க்குப் பிறகு இந்தத் தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வந்ததால் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு 1991ல் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு  205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று இடைக்கால தீர்ப்பளித்தது. 2007ல் நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டின் தண்ணீர் அளவைக் குறைத்து 192 டி.எம்.சி. தரவேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பகுதி 5-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் இந்த உத்தரவு செல்லுபடியாகும். மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பே துண்டுச்சீட்டில் எழுதிய கிறுக்கல் ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறோம் எனக் கூறியுள்ளனர்.  
2.    நடுவர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீர் போதுமானது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அவர்களோ மேலும் தண்ணீரின் அளவைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தந்தால் போதும் என்று தீர்ப்பளித்துவிட்டனர்.  
3.    காவிரி நீர் கண்காணிப்புக் குழு என்பது பெயரளவில் முன்பே இருக்கு. 1998ல் பிரதமர் தலைமையில் 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவி செய்ய ஒழுங்குமுறை குழுவும் உண்டு. இந்த ஆணையத்திற்கு அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. கண்காணிப்புக் குழுவும் பயனற்றது. இவற்றால் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பெற்றுத்தர இயலாது.  
4.    காவிரி மேலாண்மை வாரியம் என்பது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். ஒவ்வொரு மாதத்துக்கும் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீரை விடவேண்டும் என்ற நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி தண்ணீரைப் பகிர்ந்து கொடுக்கும்.  
5. காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டால் நாம் `கருணையின் அடிப்படையில் தண்ணீர் கொடு' என்று கர்நாடகத்தை கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும். கர்நாடகா விருப்பமிருந்தால் தண்ணீர் கொடுக்கும், இல்லையென்றால் மறுத்துவிடும். நாம் கட்டாயப்படுத்த முடியாது. இதனால்தான் கர்நாடகம் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
6. காவிரி நடுவர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசைத் தொடர்ந்து கட்டாயப்படுத்திக்கொண்டேதான் வந்தது. சென்ற ஆண்டுகூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு  அதிகாரமில்லை என்று மத்திய அரசு வாதிட்டது. ஆக, தமிழ்நாட்டுக்கு உரிய  நீர் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது  
7. காவிரி நீரைப் பங்கீட்டுத்தர ஸ்கீம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது மேலாண்மை வாரியத்தைதான்.  அதனுடன் நீர்கண்காணிப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.    ஆனால், மத்திய அரசோ 6 வார காலஅவகாசத்தை வீணடித்துவிட்டு, இறுதி நாளில் ஸ்கீம் என்றால் என்ன? அதன் செயல் திட்டம் பற்றி விளக்கம் வேண்டும் என்று வார்த்தை விளையாட்டில் விளையாடுகிறது.  
8.  ஆக மொத்தத்தில் தமிழகத்துக்குக் காவிரிநீரைப் பெற்றுத்தர மறுப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.  அதனால்தான், சட்டத்தின் ஓட்டையைத் தேடி அலைகிறது. மத்திய அரசுக்குப் பாடம் புகட்ட, அரசியல் கட்சியினர் மற்ற அமைப்பினர் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமை உணர்வுடன் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரின் உரிமையைப் பெறுவதில்உறுதியாகச் செயல்பட வேண்டும் 


No comments:

Post a Comment