Wednesday, 28 February 2018

சிறுவயதில் சிவராத்திரி

சிறுவயதில் சிவராத்திரி..!
(வல்லம்)
5 ஆம் வகுப்பு முடிந்து அரைக்கால் டவுசரில் இருந்து முழுடவுசருக்கு மாறிய தருணம்.
பள்ளிக்கு மிக அருகில் வீடு என்பதால் பெரும்பாலும் மதிய சாப்பாடு வீட்டில்தான் 
12.30 மணி (சோத்துமணி) அடிச்சதும் எல்லாரும் தட்ட தூக்கிட்டு சத்துணவுக்கு ஓடுவாங்க நான் வீட்டுக்கு ஓடுவேன் (ஏன்னா அப்பத்தாவுக்கும் சத்துணவு முருகேசனின் மனைவிக்கும் போன வாரம் சண்டை.. அதானல அங்க சாப்டாதானு அப்பத்தா ஆர்டர்)
அதானல வீட்டுக்கு வந்தேன் அம்மா ஏதோ மாவு கலந்துட்ருந்தாங்க ரைட்டு இன்னிக்கு வீட்ல ஏதோ பலகாரம் போல சாயந்திரம் விசுவா அண்ணன் டியுசன் முடிஞ்சதும் வந்து ஒரு புடி புடிச்சிரலாம்னு நினச்சிட்டே சாப்டுட்டு மீண்டும் பள்ளிக்கு போயிட்டேன்..4 மணிக்கு பள்ளி முடுஞ்சதும் நானும் ஶ்ரீதரும் சைக்கில்ல போயி பூமி மாமா கடையில ஸ்டிக்கர் சொரண்டினா பரிசுப்பொருள் விழும் அத வாங்கி ஒன்னும் கிடைக்காத விரக்தில டியுசனுக்கு போயிட்டோம் 7 மணிக்கு டியுசன் முடிஞ்சு பலகாரம் 
 சாப்டலாம் னு வீட்டுக்கு போனா அம்மா அப்பத்தா சித்தி யாரையுமே காணோம் தாத்தா மட்டும் உக்காந்து 7 மணி சன்நியுஸ் பாத்துட்ருந்தாரு.. கொஞ்ச நேரம் கழிச்சு ஜெயந்திரா அக்கா கோலங்கள் நாடகம் பாக்க வந்துச்சு.. அக்கா அம்மா அப்பத்தா எல்லாரும் எங்கனு கேட்டேன் எல்லாரும் வசந்நா அத்தை வீட்டுல சிவராத்திரி சாமி கும்புட்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க... உனக்கு வேணும்னா தோசை போட்டு தரேன் சாப்பிட்டு படி.. அவங்க வர்றவருக்கும்னு சொல்லுச்சு. சரி இப்போதைக்கு தோசையா சப்புடுவோம் அப்பறமா பலகாரத்த சாப்டுவோம்னு சாப்பிட்டேன்.. கை கழுவிட்டு வர்றதுக்குள்ள அம்மா அப்பத்தா கவிதா சித்தி அனுசியா சித்தி எல்லாரும் வந்துட்டாங்க ரைட்டு அடுத்த ரவுண்டுக்கு பலகாரம் வந்துருச்சுனு நினச்சா சித்தி அத மறச்சு மறச்சு கொண்டுபோச்சு சித்தி அதுஎன்னனு கேட்டேன் அது சாமி கும்பிட்ட பலாகரம்டா.. எனக்கு குடுக்காம கொண்டு போற.. உடனே அப்பத்தா அடியே அவனுக்கு ரெண்டு எடுத்துக் குடுங்கடினு சொல்ல இல்ல குடுத்தா அக்கா திட்டும் அம்மாயினு சித்தி அந்த தூக்குசட்டிய கொண்டுட்டு உள்ள போயிருச்சு உடனே எனக்கு அந்த பலகாரம் வேனும்னு கத்தி கதறி கீழ விழுந்து உருண்டு பெரண்டு அழுது அம்மா வந்து ஒரு கொட்டு வச்சதுக்கு அப்பறம்தான் ஒரு நிலைக்கு வந்தேன்... அதற்கப்றம் எத்தனையோ சிவராத்திரி கடந்துவிட்டது ஆனா அந்த தூக்குசட்டிக்குள்ள என்ன பலகாரம் இருக்குனு இப்ப வரைக்கும் தெரிஞ்சுக்க முடியல...!
இன்னிக்கும் கிச்சனுக்குள்ள அந்த தூக்குசட்டி இருக்கு அதுக்குள்ள என்ன பலகாரம் இருக்குனு பாக்க ஆசைதான் ஆனா அம்மா திட்டுவாங்க அதனால வேண்டாம்..! 
அம்மா இன்னொரு சப்பாத்தி போடுங்க போதும்..!!

அந்த சிவராத்திரி சாமி கும்பிட்ட பலகாரத்த ஆம்பளைங்க சாப்பிடக்கூடாதாம்...!

#சிறுவயது_நினைவலைகள்

சைக்கிள் மட்டுமே வாழ்கையாய்..!!

இன்னிக்கு ஜிம்ல சைக்கிள் ஓட்டும்போது யோசிச்சேன் 

இப்ப இருக்குற சின்ன பசங்களுக்கு சைக்கிள் ஓட்ட யாருதான் சொல்லிக்குடுக்குறது..?
யாரும் சொல்லிக்குடுக்காம சைடு வீல் வச்ச சைக்கிள்ள அவனுங்களா ஓட்டிப் பழகுனதாலதான் அவனுங்களால
 சைக்கிள்ல பெடல் அடிச்சு கால தூக்கிப் போட்டு ஏற தெரியல..!

பின்னாடி லோடு ஏத்தி ஓட்டத் தெரியல.
ஒரு செங்கல பின்னாடி வச்சாலும் இந்த முக்கு முக்குறாங்க...!

சைக்கிளுக்கு நாமலே பஞ்சர் பாக்குறது எப்படினு எவனுக்கும் தெரியல
அட சைக்கிள்ல செயின் கழண்டா கூட மாட்ட தெரியல....

எனக்குலாம் ஆறாவது படிக்கிறப்ப தான் அப்பா சைக்கிள் வாங்கி தந்தாங்க அதுக்கு முன்னாடி சனி ஞாயிறு பரமக்குடி அம்மாச்சி வீட்டுக்கு போனா அங்க கிருஷ்ணா தியேட்டர் ஒட்டுன காக்கூர் ரோட்டுல ஒரு மணி நேரத்துக்கு ரெண்டு ரூபாய்னு ஒருத்தரு சைக்கிள் வாடகைக்கு குடுப்பாரு அங்க நானும் சிங்கராஜ் தாத்தாவும் போயி இடையில கம்பி இல்லாத சைக்கிள் வாடகைக்கு வாங்கிட்டு வருவோம், (அந்த கடைக்காரர் சிங்கராஜ் தாத்தாவ பாத்து வணக்கம் போட்டு வாங்க செக்கிங் சார்னு சைக்கிளுக்கு வாடகைக் காசு கூட வாங்கமாட்டரு.) சைக்கிள எடுத்துட்டு ஐடிஐ பக்கத்துல இப்ப இருக்குற அரசு கலைக்கல்லூரி அந்த கிரௌண்டுல தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக்கொடுத்தாங்க..ஒரே வாரத்துல சூப்பரா சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சேன்

அப்பறம் எனக்குனு சைக்கிள் வாங்குனதுக்கப்பறம் எங்க போனாலும் சைக்கிள்ள தான் போறது.. பள்ளிக்கூடம் பக்கத்து சந்துல இருக்கு ஆனா அதுக்கு தெருவு சுத்தி சைக்கிள்ள தான் போவேன்
பூமி சித்தப்பா கடைக்கு போறதுக்கும் ..முனு மணிக்கு பர்மாக்கார ஆத்தா பால்பண்ணைக்கு பால் வாங்க போறதுக்கும், 
செட்டுவூரணில குளிக்கப்போறதுக்கும் கிருஷ்ணன் தாத்தா ரைஷ்மில் போறதுக்கும்னு எங்க போனாலும் சைக்கிள்தான்

ஒரு தடவ ஒரு சைக்கிள்ல மச்சான் ஶ்ரீதர், செந்திலு ரெண்டுபேரையும் வச்சு பகைவென்றி பாத வழியா அரியனந்தல் வரைக்கும் ஓட்டிப்போயிருக்கேன்.(என்னடா ரெண்டு பேர் வச்சு ஓட்றது அதிசயமானு கேக்காதிங்க மாப்ள ஶ்ரீதர் கொஞ்சம் புஷ்டிய நாலுபேரு சேர்ந்தாப்ள இருப்பாரு.. அவர ஶ்ரீதர் வாண்டையார்னு எல்லாரும் செல்லமா அழைப்பதுண்டு )அதனால தான்...!

சேமத்தூரணி தட்டப்பயிறு தோட்டத்துல இருந்து மூனு மூட்டையும் தாத்தாவுக்கு ஒரு தண்ணிக்கொடமும் எடுத்துக்குட்டு சைக்கிள்ல வச்சு ஓட்டிட்டு முல்லத்தெரு வீட்டுக்கு போயிருக்கேன்.. (கடைத்தெரு வழியா போனா நம்ம ஃபேன்ஸ் தொல்ல தாங்க முடியாதுனு அப்படியே கணக்கப்பிள்ளை வீடு சுத்தி தெக்குத்தெரு வழியா புள்ளையார் கோவில் கிட்ட திரும்பி வீட்டுக்கு போயிருவேன்)

மஞ்சக்கொல்லை தைப்பூசத்துக்கு நானு ஶ்ரீதர் கோபி ரெண்டு பேரையும் சைக்கிள்ள ஏத்திக்கிட்டு ஆத்துமணலுக்குள்ள வண்டி ஓட்டிட்டு போவேன்..ஏன்னா அந்த தைப்பூசத்துலதான் அம்மாவுக்கு தெரியாம ஐஸ் வாங்கி திங்கலாம்.. அப்புடியும் எவனாவது பாத்து அம்மாகிட்ட சொல்லிருவாங்ங,வீட்டுக்கு திரும்ப போகும்போது அம்மா வெயிட்டிங் வித் விசிறிமட்டை...!!!! போன தடவைக்கு இந்த தடவை அடி கொஞ்சம் கம்மிதான்..!

வல்லத்துல சைக்கிள்கடை இல்ல அதானல சைக்கிள்ல ஏதாவது பிரச்சனையா எல்லாரும் அவங்களா அத சரி பண்ண கத்து வச்சுருந்தாங்ங அதனால நாகலிங்கம் தாத்தா சைக்கிள் பம்புல காத்து அடிக்கிறது,பஞ்சர் பாக்குறது எப்படினு எல்லாத்தையும் சொல்லி தந்தாங்க...!

வல்லத்துல பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ எனக்கு ரெண்டு கைய விட்டு சைக்கிள் ஓட்டத்தெரியும்னு சொல்றதே ஒரு தனி கெத்து தான்..!

“மீண்டு திரும்பா அவ்வினிய நாட்கள்”

அதனால ஏரியால இருக்குற குட்டி பசங்களுக்கெல்லாம் சைக்கிள் ஓட்டுறது
பெடல் அடிச்சு சைக்கிள் ஓட்றது.. பின்னாடி லோடு வச்சு சைக்கிள் ஓட்றது.. பிரேக் புடிக்கலனா கால வச்சு தரையில தேச்சு நிறுத்துறது எப்படி..பஞ்சர் பாப்பது எப்படி
செயின் மாட்றது எப்படினு எல்லாத்துக்கும் இலவசமா வகுப்பு எடுக்கலாம்னு இருக்கேன்..!